மின்வேலியில் சிக்கி சிறுவன் பலி அரகண்டநல்லுாரில் 3 பேர் கைது
திருக்கோவிலுார்: மின்வேலியில் சிக்கி சிறுவன் இறந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த வி.புத்துார், காலனியை சேர்ந்தவர்கள் அல்லிமுத்து மகன் நவீன்ராஜ்,15; சுதாகர் மகன் கோபி,14; நண்பர்களான இருவரும் புத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற நவீன்ராஜ் வீட்டு மாடுகள் இரவு 7:00 மணி வரை வீடு திரும்பவில்லை.இதனால் நவீன்ராஜ், கோபி ஆகிய இருவரும் நெற்குணத்தில் மாடுகளை தேடினர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன், 34; என்பவரின் நெல் வயலுக்கு சென்ற போது, அங்கு காட்டுப்பன்றியிடமிருந்து பயிரை காக்க போடப்பட்டிருந்த மின்வேலி யில் இருவரும் சிக்கினர். இதில், நவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த கோபி, மொபைல் போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு உறவினர்கள் சென்று கோபியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், சிகிச்சை பெற்று வருகி றார். அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, நிலத்தின் உரிமையாளர் புவனேஸ்வரன், 34; மின்வேலி அமைத்த அந்திலியைச் சேர்ந்த கோபி, 42; காளிதாஸ், 30; ஆகியோரை கைது செய்தனர்.