தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
செஞ்சி:நிலப் பிரச்னை தொடர்பாக, சென்னையில் இருந்து காரில் கடத்தி கொலை செய்து, செஞ்சி அருகே புதைக்கப்பட்ட தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பொறியாளர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகேயுள்ள பெரும்பள்ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 71. இவர், சென்னை அயனாவரத்தில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சியில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச., நிர்வாகியாகவும் செயல்பட்டார். மறைந்த தி.மு.க., - எம்.பி., குப்புசாமியின் உதவியாளராகவும் இருந்தார்.இவரது உறவினர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான, சென்னை உத்தண்டியில் உள்ள, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப் பிரச்னை தொடர்பாக, கடந்த 16ம் தேதி, சென்னையில் இருந்து காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார்.கொலையாளிகள் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்ஒலக்கூர் பசுமலையின் பின்புறம் குழி தோண்டி சடலத்தை புதைத்தனர். சொந்த ஊரில் அடக்கம்
இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நிலப் புரோக்கர் ரவி, 41 மற்றும் அவரது கூட்டாளிகள் விஜய், 38; செந்தில், 38, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். விஜய், செந்தில் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.சடலத்தை அடையாளம் காட்ட, ரவியை மேல்ஒலக்கூருக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவர் காட்டிய இடத்தில், செஞ்சி தாசில்தார் ஏழுமலை முன்னிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், குமாரின் உடலை தோண்டி எடுத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து, உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய இருப்பதாக, குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு தொடர்பு?
போலி ஆவணங்கள் வாயிலாக நில அபகரிப்பில் ஈடுபட்டு வந்த ரவி, பத்திரப்பதிவு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். உத்தண்டியில், ரமேஷுக்கு சொந்தமான, 2 கோடி நில அபகரிப்பு விவகாரத்தில் பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கும், அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.