சோழர் கால கல்வெட்டு; திண்டிவனம் அருகே கண்டுபிடிப்பு
விழுப்புரம்; திண்டிவனம் அருகே சோழர்கால ஏரி துாம்பு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள கீழ் இடையாலம் கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் சமணர் கோவில் அருகே பள்ளம் தோண்டியபோது, முற்கால சோழர் காலத்திய துாம்பு கல்வெட்டு கண்டறியப்பட்டது. விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரி வரலாற்று பேராசிரியர் ரமேஷ், தமிழாசிரியர் கமலக்கண்ணன், முதுகலை மாணவர் கோபி ஆகியோர் கள ஆய்வின்போது அதனை கண்டறிந்தனர். இது குறித்து ர மேஷ் கூறியதாவது: ஏரி துாம்பு என்பது, தேக்கி வைக்கும் நீரினை, தேவைப்படும்போது சீராக பாசனத்திற்கு பயன்படுத்த அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். தமிழர்களின் பழமையான, பாரம்பரிய நீர் மேலாண்மையாகும். விழுப்புரம் மாவட்டத்தில், நீர் தேவைகளை பூர்த்தி செய்வதில், ஏரிகளின் பங்கு மு க்கியமானது. நீர்ப்பாசனத்தை பெருக்கும் வகையில் பல்லவர்கள், சோழர்கள் மற்றும் அவர்களின் கீழ் ஆட்சி புரிந்த குழுவில் உள்ள மன்னர்கள், பல ஏரிகளை வெட்டி, துாம்புகளை அமைத்துள்ளனர். அவ்வகையில், இந்த கீழ் இடையாலத்தில் பெரிய ஏரியில், சோழர் காலத்தில் துாம்பும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்வெட்டு, தற்போது குடியிருப்பு பகுதியில் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில், உடைகரயத்தை சேர்ந்த வீரப்பாகர் மகன் அறிவாளன் செய்வித்த துாம்பு என்பதையும், அது ராஜகேசரியின், 26வது ஆட்சி ஆண்டில் செய்யப்பட்டதையும் குறிப்பிடுகிறது. இதன் எழுத்து அமைவை கொண்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில், இவ்வூர் ஏரி வெட்டப்பட்டு, துாம்பும் அமைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. மேலும், ஏரியில் உள்ள பாறையில், முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திய நில அளவுகோல் ஒன்றும் காணப்படுகிறது. இதனருகே சமண முனிவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால், இவ்வூர் வரலாற்று சிறப்புமிக்கது என தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.