அரசு வீடு கட்டும் திட்டங்களில் தாமதம் விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
விழுப்புரம்: விழுப்புரத்தில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், அரசின் வீடு கட்டும் திட்டங்களின் கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை. அரசின் வீடு கட்டும் திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு வரும் கான்கிரீட் வீடுகளின் முன்னேற்றம் குறித்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.குறிப்பாக, கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் மறு சீரமைப்பு திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பி.எம். ஜன்மன் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வரும் வீடுகளின் கட்டுமானப்பணிகளின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது, கடந்த 2024-25ம் ஆண்டில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கி, கட்டப்பட்டு வரும் வீடுகளின் முன்னேற்றம் குறித்தும், அதன் தாமதம் குறித்தும் விளக்கம் கேட்டு, அதனை விரைந்து முடித்திட கலெக்டர் உத்தரவிட்டார்.கூடுதல் கலெக்டர் பத்மஜா, ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.