வளர்ச்சி திட்டப்பணிகள் : அமைச்சர் ஆய்வு
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில், சமூக நீதித்துறை அமைச்சர் தலைமையில் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், சப் கலெக்டர் ஆகாஷ், பயிற்சி சப் கலெக்டர் ஸ்ரீரஷத், திண்டிவனம் கமிஷனர் பானுமதி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுமக்களுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள் குறித்தும், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் செயல் திறனைத் தொடர்ந்து கண்காணிப்பது குறித்தும், பழுதடைந்த குடிநீர் குழாய்களை உடனுக்குடன் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வருகை தொடர்பாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், வணிக வளாகம், குடிநீர், கழிவறை, மின்விளக்கு, துாய்மை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து, துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.