விவசாயிகள் பயிர் காப்பீடு வேளாண் துறை அறிவுறுத்தல்
விழுப்புரம்: மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் செய்திக்குறிப்பு: இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பை ஈடுசெய்ய மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சிறப்பு (சம்பா) மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள நெல்-2, உளுந்து, மணிலா, எள், கரும்பு ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டும். மாவட்டத்தில் சிறப்பு (சம்பா) பருவத்திற்கு 13 வட்டாரங்களில் உள்ள 794 வருவாய் கிராமங்களில் நெல்-2 பயிர் காப்பீடு செய்ய அறிப்பு செய்யப்பட்டுள்ளது. உளுந்து, மணிலா, கரும்பு பயிர்களுக்கு 34 மற்றும் எள் பயிருக்கு 14 குறுவட்டங்களிலும் காப்பீடு செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு (சம்பா) பருவத்தில் நெல்-2 நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் நவ., 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். உளுந்து பயிருக்கு நவ., 30, மணிலாவிற்கு 2026ல் ஜன., 20, எள் பயிருக்கு ஜன., 31, கரும்பு பயிருக்கு மார்ச் 31ம் தேதிகளுக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். நெல்லிற்கு 544.28 ரூபாயும், உளுந்துக்கு 254 ரூபாயும், மணிலாவிற்கு 467.81 ரூபாயும், எள்ளுக்கு 181.43 ரூபாயும், கரும்புக்கு 1149.03 ரூபாயும் விவசாயிகள் ஏக்கருக்கு பிரிமியம் தொகையாக செலுத்த வேண்டும். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீட்டு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். நடப்பு பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும். விவசாயி பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.