கடந்தாண்டில் 9,168 விபத்துகளில் 2,173 பேர் உயிரிழப்பு; விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வலியுறுத்தல்
விழுப்புரம்: விழுப்புரம் சரகத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட, 9 ஆயிரத்து 168 விபத்துகளில், பலத்த காயமடைந்த 2 ஆயிரத்து 173 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், கடந்த 2024ம் ஆண்டு வரை 15.28 லட்சம் போக்குவரத்து வாகனங்களும், 3.56 கோடி எண்ணிக்கையில் போக்குவரத்து அல்லாத வாகனங்களும், மொத்தம் 3.7 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 62 ஆயிரம் விபத்து மாநிலம் முழுதும் கடந்த 2024ம் ஆண்டு மட்டும் 61 ஆயிரத்து 904 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில், 18 ஆயிரத்து 74 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023 ம் ஆண்டை விட, 1.49 சதவீதம் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக, கடந்தாண்டு 993 நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பிற விதிகளை மீறியதாக 6 ஆயிரத்து 97 நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2,173 பேர் உயிரிழப்பு விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் போக்குவரத்து சரகத்தில், கடந்த 2024 ம் ஆண்டில், 9 ஆயிரத்து 168 இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டது. இந்த வாகன விபத்துக்களில், பலத்த காயமடைந்த 2 ஆயிரத்து 173 பேர் உயிரிழந்தனர். இதில், 294 நபர்கள் ெஹல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியபோது விபத்தில் சிக்கி, உயிரிழந்துள்ளனர். 34 ஆயிரம் விபத்து விழுப்புரம் சரகத்தில், கடந்த 2021 ம் ஆண்டு 7 ஆயிரத்து 563 விபத்துகளில் ஆயிரத்து 372 நபர்களும், கடந்த 2022 ம் ஆண்டு 8 ஆயிரத்து 738 விபத்துகளில் ஆயிரத்து 910 நபர்களும், கடந்த 2023 ம் ஆண்டு 8 ஆயிரத்து 761 விபத்துகளில் 2 ஆயிரத்து 173 நபர்களும் இறந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 34 ஆயிரத்து 230 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. இதில், பலத்த காயமடைந்த 7 ஆயிரத்து 628 பேர் உயிரிழந்துள்ளனர். கவனக்குறைவால் அதிக விபத்துக்கள் பல சம்பவங்களில், வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவினால் அதிகப்படியாக விபத்துகள் நிகழ்ந்துள்ளன. பொதுமக்கள் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றினால், விபத்துக்களை கணிசமாக குறைத்திட முடியும். இதன் மூலம், விபத்து உயிரிழப்பு மற்றும் பொருட்சேதத்தை பெருமளவில் தவிர்க்கலாம். விபத்துகள் மற்றும் விபத்தினால் ஏற்படும் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதத்தை குறைக்கவும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.