உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.கே.டி., சாலையில் பேட்ச் ஒர்க் துவக்கம்; பணிகளை தரமாக செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

வி.கே.டி., சாலையில் பேட்ச் ஒர்க் துவக்கம்; பணிகளை தரமாக செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் (வி.கே.டி.,) சாலையில் உள்ள குண்டும், குழியுமான பகுதிகளில் பேட்ச் ஒர்க்கை தரமாக செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், பேட்ச் ஒர்க் செய்வதற்காக, 7 கோடி ரூபாயை நகாய் ஒதுக்கீடு செய்து, இம்மாத துவக்கத்தில் பணிகள் துவங்கியது. இதில், விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை பிரியும் இடத்திலிருந்து 9 கி.மீ., துாரத்திற்கு கப்பியாம்புலியூர், மேல்பாதி கூட்ரோடு வரை திட்டு திட்டாக பணிகளை செய்துள்ளனர்.கோலியனுார் கூட்ரோடு பகுதியிலிருந்து பேட்ச் ஒர்க் துவங்கி உள்ளது. வாணியம்பாளையம், வெ.அகரம் ஆகிய இரு இடங்களில் மேம்பால பணிகள் பாதியில் நிற்கிறது. இவ்விரு இடங்களில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வரும் சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.கண்டரக்கோட்டை ஆற்றுபாலம் அருகிலும், கொள்ளுக்காரன்குட்டை, வடலுார் அடுத்த மருவாய், பரவனாறு பாலம், மருதுார் சாலை பிரியும் இடங்களிலும் செப்பனிடும் பணி முடிந்துள்ளது. அதன்பிறகும் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இரவு நேர வாகன பயணம் சிரமமாக உள்ளது. விபத்து அபாயமும் தலைதுாக்கி உள்ளது.எனவே, வி.கே.டி., சாலையில் அனைத்து பகுதியிலும் ஏற்பட்டுள்ள பள்ளங்களை கண்டறிந்து முழுமையாக சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து நகாய் அதிகாரி கூறுகையில், 'தற்போது ஒரு லேயர் மட்டுமே சாலை போடப்பட்டுள்ளநிலையில் மழையால் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மழை முடிந்த பிறகு இரண்டாவதாக சிறிய ஜல்லிகளை போட்டு பைன் லேயர் போட வேண்டும். பல இடங்களில் பேட்ச் ஒர்க் நடக்கும்போதே கனரக வாகனங்கள் அதன் மீது பயணிப்பதால் பணியை சரிவர செய்ய இயலவில்லை. அதனால் பல்வேறு இடங்களில் புதிதாக பேட்ச் ஒர்க் செய்தும், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மீண்டும் இப்பகுதிகளை கண்காணித்து சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பேட்ச் ஒர்க் பணிகள் முழுமையாக முடிவடையும்' என்றார்.

ரூ.912 கோடி நிதி ஒதுக்கீடு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் வரை 165 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையை (வி.கே.டி., சாலை) நான்கு வழி சாலையாக மாற்றிட, கடந்த 2018ம் ஆண்டு ரூ.2,586.10 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.இதில், சேத்தியாத்தோப்பு - சோழபுரம்; சோழபுரம் - தஞ்சாவூர் ஆகிய இரு பிரிவுகளில் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. ஆனால், விக்கிரவாண்டி - பின்னலுார் இடையிலான பணியை டெண்டர் எடுத்த மும்பையை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனம், பணிகளை சரிவர செய்யாததால், அந்நிறுவனத்தின் ஒப்பந்தத்தை 'நகாய்' ரத்து செய்தது.இந்நிலையில், கிடப்பில் உள்ள சாலை பணிகளோடு, பண்ருட்டியில் மூன்று புதிய மேம்பாலம், நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் கூடுதலாக ஒரு புதிய மேம்பாலத்துடன் சாலை அமைத்திட தற்போது ரூ. 912 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இதற்கான இ - டெண்டர் சமர்ப்பிக்க, டிசம்பர் 3ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர், டிச., 4ல் திறக்கப்பட்டு, ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்பட உள்ளார். வரும் 2025 ஜனவரி முதல், 4 வழிச்சாலை பணியை துவங்கி, 18 மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ