டோல்கேட் கட்டணம் குறைக்க கோரி கொத்தட்டையில் கட்சியினர் முற்றுகை
விழுப்புரம்: விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில், கொத்தட்டை டோல்கேட்டில் நேற்று முதல், கட்டண வசூல் துவங்கியது. கட்டணத்தை குறைக்க கோரி, அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். பேச்சுக்கு பின் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.விழுப்புரம் - நாகை இடையே 194 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. விழுப்புரத்தில் இருந்து சிதம்பரம் வரை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. இச்சாலையில், கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தட்டை என்ற இடத்தில், டோல்கேட் அமைக்கப்பட்டு, நேற்று முதல் சுங்க கட்டண வசூல் துவங்கியது.கட்டணம் மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி, தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று, சிதம்பரம் வழியாக தனியார் பஸ்கள் ஓடாது என அறிவித்தனர். அரசியல் கட்சியினர், பொதுமக்கள் டோல்கேட் திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை போராட்ட குழுவினர் 500க்கும் மேற்பட்டோர், கொத்தட்டை டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி.,லாமேக் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து கைவிடப்பட்டதால், வழக்கம்போல் டோல்கேட் செயல்பட துவங்கியது.