இலவச மனைப்பட்டா கோரி நடுவனந்தல் மக்கள் மனு
விழுப்புரம் : திண்டிவனம் அருகே நடுவனந்தல் கிராமத்தினர் இலவச வீட்டு மனைபட்டா கேட்டு மனு அளித்தனர். திண்டிவனம் அருகே நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்; எங்கள் கிராமத்தில், ஆதிதிராவிடர் உள்ளிட்ட 150 குடும்பத்தினர் சொந்தமாக வீடு, வீட்டுமனை இன்றி ஏழ்மை நிலையில் வசித்து வருகின்றோம். பல ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு, விண்ணப்பித்து வருகிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் இட நெருக்கடியில் அவதிப்பட்டு வருகிறோம். கலெக்டர் நடவடிக்கை எடுத்து, இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.