உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர் கைது; போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர் கைது; போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

திண்டிவனம்; திண்டிவனத்தில் அரசு பஸ் டிரைவரைத் தாக்கிய தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 47; அரசு பஸ் டிரைவர். இவர் நேற்று காலை காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி பஸ்சை ஓட்டி வந்தார்.காலை 8:15 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு புதுச்சேரி செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே கிளியனுாரைச் சேர்ந்த் தனியார் பஸ் டிரைவர் வெங்கடேசன், 43; சங்கரிடம், 'எப்படி எங்கள் பஸ் நிற்கும் நேரத்தில் பயணிகளை ஏற்றலாம்' எனக் கேட்டு தகராறு செய்து, சங்கரை செருப்பால் அடித்து தாக்கினார். இதில் காயமடைந்த சங்கர், திண்டிவனம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.இதனை அறிந்த அரசு பஸ் டிரைவர்கள், இந்த தாக்குதலை கண்டித்து பஸ்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டிவனம் - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதித்தது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் செல்வதுரை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில், அரசு பஸ் டிரைவர்கள் போராட்டத்தை 8:30 மணியளவில் கைவிட்டனர்.அதனைத் தொடர்ந்து, போலீசார் சம்மந்தப்பட்ட தனியார் பஸ்சை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர்.மேலும், அரசு பஸ் டிரைவர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில், தனியார் பஸ் டிரைவர் வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

தனியார் பஸ் ஊழியர்கள்

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்பவர்கள் பெரும்பாலானோர் அரசு பஸ்களில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். இதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து திண்டிவனம் வழியாக புதுச்சேரி செல்லும் அரசு பஸ்களை திண்டிவனம் பஸ் நிலையத்தில், தனியார் பஸ் ஊழியர்கள், டிரைவர்கள், புரோக்கர்கள் நீண்ட நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதிப்பதில்லை.மீறி நிறுத்தி பயணிகளை ஏற்றினால், அரசு பஸ் டிரைவர்களை மிரட்டுகின்றனர். வெளியூரிலிருந்து வரும் அரசு பஸ் டிரைவர்கள் மிரட்டலுக்கு பயந்து, உடனே சென்று விடுவர். இதனால் அரசு பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பஸ் நிலையத்தில் இதுபோன்ற பிரச்னை நிகழாமல் இருக்க நிரந்தரமாக போலீசார் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி