உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்

 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டு ஊராட்சி முத்தாம்பாளையம் எல்லையில், நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் குழாய் இணைப்பு கொடுக்க பள்ளம் தோண்டும் பணி நடந்தது. இதையறிந்த, முத்தாம்பாளையம், சித்தேரிக்கரை, ஓம் சக்தி நகர், முத்தோப்பு, பொன் அண்ணாமலை நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், காலை 10:30 மணியளவில் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து , பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் காலை 11:00 மணியளவில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுதால் மேலும் பாதிப்பு ஏற்படும்.எனவே இத்திட்டம் எங்களுக்கு வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து கலெக்டர் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்குமாறு பொதுமக்களிடம், போலீசார் அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து, காலை 11:25 மணியளவில் மறியலை கைவிட்டனர். இதனால், இச்சாலையில் 25 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

போலீசார் ஆதங்கம்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் நகராட்சி அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வராமல் தாங்களே, பல இடங்களில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலை இருப்பதாக போலீசார் ஆதங்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை