உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் மறியல்; வெள்ள நிவாரணம் கேட்டு பொதுமக்கள் ஆவேசம்

தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் மறியல்; வெள்ள நிவாரணம் கேட்டு பொதுமக்கள் ஆவேசம்

விழுப்புரம் ; விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும், அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் நிவாரணம் வழங்கவில்லை என பொது மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.விழுப்புரம் நகராட்சி 9வது வார்டுக்குட்பட்ட வடக்கு தெரு, கமலா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை என, அ.தி.மு.க., கவுன்சிலர் ராதிகா செந்தில் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:20 மணிக்கு, சென்னை நெடுஞ்சாலையில் காட்பாடி ரயில்வே பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா, வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து, 11.20 மணி வரை மறியலில் ஈடுபட்டதால், விழுப்புரம்-சென்னை மார்க்கத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.விழுப்புரம் வி.மருதுார், சந்தானகோபாலபுரம் பகுதியில், வெள்ள நிவாரணம் வழங்காததால், அப்பகுதி மக்கள், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில் காலை 11:40 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தினர். 12:10 மணியளவில் கலைந்து சென்றனர்.பஞ்சமாதேவி கிராம மக்கள் காலை 11.00 மணிக்கு, விக்கிரவாண்டி - கும்பகோணம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வளவனூர் போலீசார் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து 11:20 மணிக்கு மறியலை கைவிட்டனர்.செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் வராகநதி ஆற்று பாலத்தில், அப்பகுதி மக்கள் காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை மறியலில் ஈடுபட்டனர். நங்கிலிகொண்டான் பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் பகல் 12.30 மணிக்கு தொடங்கி 15 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர்.மேல்மலையனூர் அருகே வள்ளலார் மடம் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு மக்கள் பகல் 11:20 மணிக்கு தொடங்கி 15 நிமிடம் மறியலில் ஈடுபட்டனர். வடவனுார் பகுதியில் நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் காலை 10.00 மணிக்கு தொடங்கி 15 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், செஞ்சி - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்து பாதித்தது.வானுார் அடுத்த எறையூர் கிராம மக்கள், மழை நிவாரணம் வழங்காததை கண்டித்து நேற்று மாலை 5:00 மணியளவில் திருவக்கரை- பெரும்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வானுார் இன்ஸ்பெக்டர் சிவராஜன், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. உரிய தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை ஏற்று 5:30 மணியளவில் மறியலை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Varadarajan Nagarajan
டிச 10, 2024 08:18

ஒன்றிய அரசிடம் 20000 கோடி வெள்ள நிவாரணம் கேட்டுள்ளோம், கூடியவிரைவில் கிடைக்க கடிதம் எழுதியுள்ளோம், நேரில் சந்த்தித்து அழுத்தம் கொடுத்துள்ளோம். அது கிடைத்தவுடன் நிவாரணம் அளிக்கப்படும் என சில நாட்கள் ஓடும். பிறகு ஒன்றிய அரசு வஞ்சிக்கின்றது என பிரச்சாரம் செய்து அரசியல் செய்வார்கள். அவ்வளவுதான் இந்த ...... மாடல் அரசு. அதையும் தாண்டி ஏதாவது கொஞ்சம் கொடுத்தால் அங்கு கடந்த தேர்தலில் அவர்களுக்கு வாக்கு சதவிகிதம் எவ்வளவு என பார்த்து அதற்க்கு ஏற்றாற்போல் கிடைக்கும்


சமீபத்திய செய்தி