அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கு; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்பு
விழுப்புரம்; விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கில், இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, அரசு தரப்பில் அவகாசம் கோரியுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில், கடந்த தி.மு.க., ஆட்சியில் விதிமீறி செம்மண் எடுத்ததால், அரசுக்கு 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகியோர் மீது, கடந்த 2012-ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட 67 அரசு தரப்பு சாட்சிகளிடம், நீண்டகாலமாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேர் அரசு தரப்புக்கு எதிராக, பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, கோதகுமார் ஆஜராகவில்லை. அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை.ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், ''இவ்வழக்கு தொடர்பாக மேலும் சில சாட்சிகளை விசாரித்து, கூடுதல் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதற்காக, தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்'' என கேட்டு, மனுதாக்கல் செய்தார். மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை ஜன.9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.