உளுந்து பயிர்களுக்கு நிவாரணம் மறுப்பு
விழுப்புரம்: காணை வட்டாரத்தில், பெஞ்சல் புயல் பாதித்த உளுந்து பயிரிட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் தரவில்லை என புகாரளிக்கப்பட்டது. காணை வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரமூர்த்தி உள்ளிட்ட விவசாயிகள், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலத்தில் நடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்து கூறியதாவது; காணை ஒன்றிய கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் புஞ்சை நிலத்தில் உளுந்து பயிர் செய்துள்ளனர். கடந்த நவம்பர் மாதத்தில் சாகுபடி செய்த உளுந்து பயிர் அப்போது ஏற்பட்ட பெஞ்சல் புயல் வெள்ளத்தில சிக்கி சேதம் அடைந்தது. தமிழக அரசும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது. ஆனால், காணை பகுதி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. காணை வட்டார வேளாண்துறை அலுவலகத்தில் சரியான பதில் தருவதில்லை. பிற பயிர்களுக்கு இழப்பீடு வழங்கிய நிலையில், உளுந்து பயிருக்கு மட்டும் நிவாரணம் தராமல் ஏமாற்றி வருகின்றனர் என தெரிவித்தனர்.