உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஏரியில் சாலை அமைக்கும் பணி : தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்

ஏரியில் சாலை அமைக்கும் பணி : தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்

விழுப்புரம்; விழுப்புரம் அருகே உள்ள அய்யூர்அகரம் கிராமத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,விதிகளை மீறி ஏரியில் திடீரென புதியதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், நேற்று காலை 10:00 மணிக்கு அங்கு சென்று, இயந்திரங்களையும், பணியாளர்களையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், காலை 11:00 மணிக்கு, இது தொடர்பாக தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, விதிமீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையேற்று, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'அய்யூர்அகரம் ஏரியில் , திடீரென கடந்த ஒரு வார காலமாக புதியதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏதோ, ஏரி கரையை பலப்படுத்தும் பணி நடப்பதாக நினைத்திருந்தோம். ஆனால், ஏரியின் நடுவில் விதிகளை மீறி சாலை போடுவதற்காக இயந்திரங்கள் கொண்டு மண் எடுத்து, சாலைக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தாசில்தார், பொதுப்பணித்துறையினர், வி.ஏ.ஓ.,விடம் கேட்டபோது, அவர்களுக்கே தெரியவில்லை. எவ்வித தகவலுமின்றி சிலர் சாலை போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதி தி.மு.க., பிரமுகர்களின் உத்தரவின் படி, இந்த ஏரியின் அருகே உள்ள சிலரது நிலத்திற்காக ஏரியின் வழியாக சாலைபோடும் பணி நடப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த ஏரியில் கடந்த பெஞ்சல் புயலின்போது கரை உடைந்து பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இப்போது ஏரிக்குள் சாலை அமைத்தால் வரும் மழைக்கு தேங்கும் நீரால் உடைப்பு ஏற்பட்டு அய்யூர்அகரம், சிந்தாமணி, முண்டியம்பாக்கம் கிராம பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், விதிமீறி ஏரியில் சாலை அமைப்பதை, அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ