விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை காப்பாற்றுவது போல் ரூ.1 லட்சம் அபேஸ்
திண்டிவனம்: விபத்தில் சிக்கிய டிரைவரிடம், ஒரு லட்சம் ரூபாய் 'அபேஸ்' செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்துாரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, கன்டெய்னர் லாரி ஒன்று சென்னை எண்ணுார் துறைமுகத்திற்கு 2 பொக்லைன் இயந்திரங்களை ஏற்றி சென்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் நமச்சிவாயபுரத்தை சேர்ந்த மணிகண்டன், 38, ஓட்டி வந்தார். நேற்று பகல் 12:30 மணிக்கு, திண்டிவனம் அடுத்த திருவண்ணாமலை சாலை சந்திப்பு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, திடீரென சாலையோரம் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன், லாரிக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தினர். டிரைவர் மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், லாரியில் 1 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்ததாக போலீசாரிடம் கூறினார். ஆனால், அந்த பணத்தை அவரை காப்பாற்றியபோது, உதவ வந்த நபர் திருடியுள்ளார். இதையடுத்து, ஒரு லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.