பள்ளி மாணவர்கள் சென்ற வேன் பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தனியார் பள்ளி வேன் மாணவர்களுடன் சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.கெடார் அடுத்த ஒதியத்துாரை சேர்ந்தவர் சகாயராஜ், 56; கக்கனுாரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து 25 மாணவர்களை வேனில் ஏற்றிக்கொண்டு சென்னாகுணம் நோக்கி சென்றார்.மல்லிகைப்பட்டு முனீஸ்வரன் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த பைக்கிற்கு வழிவிட, சாலையோரம் வேனை இயக்கினார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் வேன் இறங்கியது. இதனால், மாணவர்கள் அச்சமடைந்தனர்.தகவலறிந்த காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களை மீட்டு மாற்று வேன் மூலம் அனுப்பி வைத்தனர். பின், பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த வேனை மீட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.