செஞ்சி காசி விஸ்வநாதர் கோவில் அரசமரம் வேறு இடத்திற்கு மாற்றம்
செஞ்சி : செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்த 50 ஆண்டு கால அரச மரத்தை வேருடன் அகற்றி சிங்கவரம் குமராத்தம்மன் கோவில் வளாகத்தில் நடப்பட்டது.செஞ்சி, சிறுகடம்பூரில் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து புதுப்பிக்க முடிவு செய்துள்ளனர்.இதற்கான திருப்பணியை வரும் டிசம்பர் 5ம் தேதி துவங்க உள்ளனர். இதற்கு முன்னதாக கோவிலில் சுற்றுப்பிரகாரங்களை தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவிலின் எதிரே இருந்த 50 வயதுடைய அரச மரத்தை கோவில் விரிவாக்கத்திற்காக அகற்றி, மீண்டும் வேறு இடத்தில் நட்டு பாதுகாக்க முடிவு செய்தனர்.இதையடுத்து கடந்த 26ம் தேதி அரச மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கிளைகளை வெட்டி அகற்றி விட்டு 12 டன் எடை கொண்ட மரத்தின் வேர் பகுதியை கிரேன் உதவியுடன் அகற்றினர்.மரத்தின் அடி பாகத்தை டாரஸ் லாரியில் ஏற்றி, சிங்கவரம் குமராத்தம்மன் கோவில் வளாகத்திற்கு கொண்டு சென்றனர். நேற்று மரத்தின் அடி பாகத்தை ஜே.சி.பி., மற்றும் கிரேன் உதவியுடன் நட்டு, தண்ணீர் விட்டு வழிபாடு நடத்தினர்.