வெளி மாநில குட்கா கடத்தி வருவது... அதிகரிப்பு; விழுப்புரம் மாவட்ட போலீசார் திணறல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திற்கு, கடந்த 6 மாதங்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும், புகையிலை பொருட்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே கடந்த அக். 8ம் தேதி போலீசார் நடத்திய வாகன சோதனையில், லாரியில் கடத்தி வந்த குட்கா பொருட்கள் சிக்கியது. விழுப்புரம் அடுத்த முத்தம்பாளையம் அருகே வாகன தணிக்கையில், குட்கா, பான் மசாலா, பான் பராக், கூல் லீப், விமல், ஆர்.எம்.டி. போன்ற புகையிலை பொருட்கள் 260 கிலோ சிக்கியது.கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் கூட்ரோட்டில், போதைப்பொருள் தடுப்பு படை போலீசார், வாகன சோதனை செய்தனர். திருவண்ணாமலையிலிருந்து வந்த கார், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் மீது மோதிவிட்டு வேகமாக சென்றது. இதில், அவரது கை எலும்பு முறிந்தது. தொடர்ந்து, அந்த காரை அடுக்கம் காப்புக்காட்டு பகுதியில் போலீசார் விரட்டி பிடித்தனர். அதில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான, 491 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் ஆசாமி தப்பி ஓடிவிட்டார். கடந்த டிச.11ம் தேதி, விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு அருகே ரூ.30 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டிவனம் பகுதியில் கடந்த 11ம் தேதி, ரோஷனை போலீசார் வாகன சோதனை நடத்தினர். பட்டணம் கூட்ரோடு அருகே சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் பதுக்கி வைத்திருந்த, ரூ.2.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், ஓங்கூர் சோதனை சாவடி அருகே சென்ற ஒரு காரை நிறுத்தி, ஒலக்கூர் போலீசார் சோதனையிட்டனர். அதில் இருந்த ரூ.4.40 லட்சம் மதிப்பிலான 440 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஆரோவில் போலீசார் நாவற்குளம் பகுதியில் வாகன சோதனை நடத்தி, பைக்கில் கடத்திய 12 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஆட்டோவில் கடத்தி வந்த 22 மூட்டைகள் குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர்.கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.இருந்தும் குட்கா பொருட்கள் நடமாட்டம் குறையாததைக் கண்டு, போலீசார் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.