கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
விழுப்புரம்: கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி, விழுப்புரத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது.இயேசு குடிலில் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதியில், கிறிஸ்துவ பெருமக்கள் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் கிறிஸ்துவ பெருமக்கள் புத்தாடை அணிந்து, தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனை செய்து பின் வீடுகளில் இயேசுவை வழிபட்டு குடும்பத்தோடு கொண்டாடுவது வழக்கமாகும். இந்த கிறிஸ்துமஸ் தினத்தை யொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு இயேசு பிறந்து குடிலில் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, பங்குத்தந்தை அருள் புஷ்பம் திருப்பதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். தொடர்ந்து, சிறப்பு திருப்பலியும், காலை 6.00 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. இதில், கிறிஸ்துவ பெருமக்கள் பலர் தங்களின் குடும்பங்களோடு கலந்து கொண்டு, திருப்பலி முடிந்த பின், ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பின், வான வேடிக்கை வண்ணமயாக வானில் முழங்க கிறிஸ்துமஸ் விழா விழுப்புரத்தில் களைகட்டியது. இதே போல், விழுப்புரம் நகரில், சி.எஸ்.ஐ., துாய ஜேம்ஸ் தேவாலயம், சேவியர் காலனி துாய பவுல் மிஷனரி தேவாலயம், டி.இ.எல்.சி., தேவாலயம், புனித ஜென்மார்க்கினி, ரயிலடி ஆரோக்கியமாதா உட்பட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.