டேபிள் டென்னிஸ் போட்டி அரசு கல்லுாரி அசத்தல்
வானுார்:மாவட்ட அளவில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், வானுார் அரசு கலைக்கல்லுாரி மாணவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் மூன்றாம் பரிசு பெற்றார். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்தவும், அனைத்து மாவட்டங்கள் மற்றும் மண்டல அளவிலான இளைஞர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில், அந்த கல்லுாரியை சேர்ந்த வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் அரவிந்த் மூன்றாம் பரிசை பெற்றார். அவரை கல்லுாரி முதல்வர் வில்லியம், உடற்கல்வி இயக்குநர் அரங்க பண்பில்நாதன், கல்லுாரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.