விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் சாலை மறியல் கலாச்சாரம் பயணிகள் அவதியை போக்க காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
விழுப்புரம் மாவட்டத்தில் சிறிய பிரச்னைகளுக்கும் சாலை மறியல் செய்யும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட சாலை மறியல்கள் நடந்துள்ளன. குறிப்பாக தமிழக அரசு வெள்ள நிவாரணம் வழங்காத அனைத்து கிராம மக்களும் தங்கள் பகுதியிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலை மறியல் செய்தனர்.செஞ்சி அடுத்த சத்தியமங்கலத்தில் இப்பிரச்னைக்காக சாலை மறியல் 4 மணி நேரம் நடந்தது. பெங்களூர்-புதுச்சேரி இடையிலான இந்த சாலை வழியாக பெங்களூர் மட்டுமின்றி, மும்பை, ஐதராபாத் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதே சாலையில் வல்லம், களையூர் கிராமங்களில் 5க்கும் மேற்பட்ட சாலை மறியல் நடந்தது.மயிலம் ஒன்றியத்தில் பல கிராமங்களில் புதுச்சேரி சாலையில் சாலை மறியல் செய்தனர். விக்கிரவாண்டி ஒன்றியத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனுார், கயத்துார், முண்டியம்பாக்கம் பகுதியிலும், செஞ்சி-விழுப்புரம் சாலையில் கஞ்சனுார், துாம்பூர் உட்பட பல கிராமங்களிலும் சாலை மறியல் நடந்தது. இவை பொதுப்பிரச்னையாக இருந்தாலும் இதற்கு பின்னால் எதிர்கட்சியினர் மட்டுமின்றி, சில இடங்களில் ஆளும் கட்சியினரும் இருந்தனர்.இது மட்டுமின்றி தற்கொலை, இடப்பிரச்னை என சொந்த காரணங்களுக்காகவும், அரசியல் கட்சியினர் அரசுக்கு எதிராகவும் சாலை மறியல்கள் செய்தனர்.இவர்கள் எந்த பிரச்சனையையும் அரசின் கவனத்திற்கு முறையாக கொண்டு சென்று தீர்வு காணாமல் எடுத்த எடுப்பிலேயே சாலை மறியலில் இறங்கி விடுகின்றனர். இதனால் பொது மக்கள் பல வகைகளிலும் பாதிக்கப்படுகின்றனர்.சாலை மறியல் செய்பவர்கள் சில இடங்களில் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., பி.டி.ஓ., இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., தாசில்தார் செய்யும் சமாதானத்தை ஏற்பதில்லை. கலெக்டர் வரவேண்டும், சப் கலெக்டர் வரவேண்டும் என அடாவடி செய்கின்றனர்.இதனால் உயரதிகாரிகள் வழக்கமான பணிகளையும், கூட்டங்களையும் ஒத்திவைத்து விட்டு மறியல் நடக்கும் இடத்திற்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.மறியல் செய்யும் இடத்திற்கு போலீசார் உடனடியாக வந்தாலும் மறியல் செய்பவர்கள் மீது தடியடி செய்ய கூடாது, பலவந்தபடுத்த கூடாது என்ற மேலிட உத்தரவு காரணமாக மயிலே, மயிலே இறகு போடு என கெஞ்சும் நிலையில் போலீசார் உள்ளனர்.நியமில்லாத காரணங்களுக்காகவும், அரசை நிர்பந்திக்கவும் சாலை மறியல்கள் செய்வதை கட்டுப்படுத்த சட்டம் சரியான தீர்வுகளை கொடுத்துள்ளது. மறியல் செய்பவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்யாமல், மண்படத்தில் அடைத்து விருந்தினர் போல் மறியாதை செய்து மதிய உணவும், டீ, காபி, பிஸ்கட் கொடுத்து பாதுகாப்புடன் அனுப்பி வைக்கின்றனர்.போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மென்மையாக நடந்து கொள்வதால் நாளுக்கு நாள் சாலை மறியல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே முன் அறிவிப்பின்றி சாலை மறியல் செய்து பொது மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.