விநாயகர் ஊர்வலத்திற்கு மாற்று வழி: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் மாற்று வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த நடவடிக்கை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.ஸ்ரீவில்லிபுத்துார் பாலமஸ்தான் நுாருல்லா தாக்கல் செய்த பொதுநல மனு: விநாயகர் சதுர்த்தியையொட்டி ஹிந்து முன்னணி சார்பில் ஸ்ரீவில்லிபுத்துாரில் சிலைகள் ஊர்வலம் நடைபெறும். மதுரை-ராஜபாளையம் ரோடு வழியாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சில ஆண்டுகளாக உள்நோக்கில் பஸ் ஸ்டாண்ட், ஜூம்மா புது பள்ளிவாசல், நேதாஜி ரோடு வழியாக செல்கின்றனர். பள்ளிவாசல் முன் ஆட்சேபகரமான கோஷங்கள் எழுப்புகின்றனர். அருகே நகைக்கடைகள், காய்கறி மார்க்கெட் உள்ளன. அக்குறுகிய பகுதியில் ஊர்வலம் செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிவாசல் வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதிப்பது சட்டவிரோதம். ஊர்வலத்தின் போது சிலர் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 2023 ல் விதிமீறலால் ஊர்வலம் 2 மணிநேரம் தடைபட்டது.மாற்றுவழியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதிக்க கலெக்டர், எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: குறிப்பிட்ட வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல வேண்டும் என நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. இதில் தலையிட விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட னர்.