திருத்தங்கல் பேட்டை தெருவில் சேதமடைந்த பாலம்
சிவகாசி: திருத்தங்கல் பேட்டை தெருவில் சேதமடைந்த பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.திருத்தங்கல் 5வது வார்டில் பேட்டை தெரு உள்ளது. தெரு வழியாக செல்லும் ஓடை மீது உள்ள பாலம் சேதமடைந்திருப்பதாலும் தடுப்பு சுவர் இல்லாததாலும் நடந்து செல்லவே மக்கள் சிரமப்படுகின்றனர். இருட்டில் டூ வீலரில் வருபவர்கள் தவறி ஓடையில் விழுந்து விடுகின்றனர். மேலும் ஓடையிலேயே குப்பை கொட்டப்படுவதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரத் தேடும் ஏற்படுகிறது. மேலும் கொசு உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். இந்நிலையில் ஓடையில் பாலம் கட்டுவதற்காக ஒரு ஆண்டிற்கு முன்பு ரூ. 20 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. ஆனாலும் இதுவரையிலும் பணிகள் துவங்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஓடையில் பாலம், தடுப்பு சுவர் அமைப்பதோடு முழுமையாக துார்வார வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.