தமிழக அரசு சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் உயிர்க்காக்கும் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் 'முதல்வர் மருந்தகம்' திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தின் கீழ் மருந்தகம் அமைக்க தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சமும், கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ. 2 லட்சமும் மானியமாக வழங்கப்பட்டது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 27 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டது. அதில் 10 மட்டுமே தனி நபர்கள் தொடங்கியது. 17 மருந்தகங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தொடங்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலக கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம், முகவூர் பாட்டக்குளம், அருணாச்சலபுரம், கிருஷ்ணாபுரம், தாயில்பட்டி, மல்லாங்கிணர் பந்தல்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், சிவகாசி, வத்திராயிருப்பு, வீரசோழன் கூட்டுறவு கொண்டக சாலைகள், நுகர்வோர் கூட்டு பண்டகசாலை சார்பில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டது. அரசு வழங்கிய மானியத்தில் ரூ.2 லட்சம் மாநிலத்திற்கு ரூ.1.5 லட்சத்திற்கு மருந்துகளும் ரூ.50 ஆயிரம் பணமாக வழங்கப்பட்டது. ஆனால் மருந்தகத்திற்கான உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, கடை முன்பணம், வாடகை, மின் கட்டணம், ஊதியம் என செலவு அதிகரித்து கூட்டுறவு சங்கங்களின் நிதி நெருக்கடி ஏற்பட்டு லாபம் குறைந்துள்ளதால் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக கூட்டுறவு சிக்கன நாணய சங்க நிர்வாகத்தை கண்டித்து ஆரம்ப பள்ளி கூட்டணி சார்பில் சுவரொட்டி ஒட்டப் பட்டுள்ளது. ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூறுகையில், வன்னியம்பட்டியில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டதற்கு கடை முன்பணம், வாடகை, மின் கட்டணம், ஊழியர் சம்பளம் ஆகியவற்றிற்கு கூட்டுறவு சங்க நிதியிலிருந்து செலவு செய்துள்ளனர். இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவசர தேவைக்கு உறுப்பினர்கள் கடன் கேட்டால், இல்லை எனக் கூறுகின்றனர். மேலும் கடந்த நிதி ஆண்டில் 13 சதவீதம் லாபத் தொகை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 5 சதவீதம் மட்டும் லாபத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதே நிலைதான் பிற கூட்டுறவு சங்கங்களில் நிலவுகிறது. மக்களுக்கு குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அது கூட்டுறவ சங்கங்களை பாதிக்க கூடிய வகையில் இருக்கக் கூடாது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. மாநில அரசு இதை பரிசீலனை செய்ய வேண்டும்.