அரசு மருத்துவமனையில் கைதி வார்டு திட்டம்; ஆர்வமில்லா மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு தினமும் பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக வெளிநோயாளிகளாக வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஆனால் மருத்துவக்கல்லுாரி துவங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கைதிகளுக்கான வார்டுகளை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் உள்நோயாளிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இவர்களுக்கான பாதுகாப்பு பணியில் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபடுகின்றனர்.இவர்கள் பணி முடிந்து சென்று மற்றவர் பணிக்கு வரும் இடைவெளியில் கைதிகள் தப்பி செல்வதும், அவர்களை மறுபடியும் போலீசார் பிடிப்பதும் தொடர்கிறது. உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் சக நோயாளிகளை பார்க்க வருவது போல வந்து கைதிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. இது போன்ற அசாம்பாவிதங்கள் தொடர்வதால் சிறையில் இருந்து சிகிச்சை பெறவரக்கூடியவர்களை பாதுகாப்பு கருதி கைதி வார்டு உள்ள மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.மருத்துவமனை நிர்வாகம் கைதி வார்டு அமைக்க தேவையான இடத்தை வழங்க தயாராக இருந்தும் மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காததால் 4 ஆண்டுகளை கடந்தும் வார்டு அமைக்கப்படவில்லை. எனவே விருதுநகர் அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான தனி வார்டு அமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.