உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டாக்டர்கள் பற்றாக்குறை, சேதமான மார்ச்சுவரி

டாக்டர்கள் பற்றாக்குறை, சேதமான மார்ச்சுவரி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் செயல்படும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை டாக்டர் பணியிடம் காலியாக இருப்பது, லேப் டெக்னீசியன், மகப்பேறு டாக்டர் பணியிடங்களை அதிகரிக்காததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அருப்புக்கோட்டைமாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். 297 பெட் வசதிகள் உள்ளது. 2023 ல் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் இங்குள்ள மார்ச்சுவரி கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் இடியும் நிலையில் உள்ளது.அருப்புக்கோட்டை சுற்றியுள்ள காரியாபட்டி திருச்சுழி நரிக்குடி உட்பட பகுதிகளில் நடக்கும் விபத்துகளில் இறந்தவர்கள், தற்கொலை செய்தவர்கள் உடல்களை இங்கு உடற்கூராய்வு செய்யப்படுகிறது. மாதத்தில் 20 பிண பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் இங்கு பிரீசர் வசதி இல்லை.இங்குள்ள லேப்களில் போதுமான பணியாளர்கள் இல்லாமல் நோயாளிகள் பரிசோதனைக்கு காத்திருக்க வேண்டி உள்ளது. ஸ்கேன் டாக்டர் இல்லாததால், தனியாரிடத்தில் எடுக்க வேண்டி உள்ளது. மகப்பேறு டாக்டர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். மருத்துவமனையில் பல கட்டடங்கள்சேதமடைந்துள்ளன. மக்கள் நடந்து செல்லும் நடைபாதை கூரை காரைகள் பெயர்ந்துள்ளது. மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அதற்கான வசதிகள் செய்யப்படவில்லை.

கூடுதல் வசதிகள் வேண்டும்

காத்தமுத்து, தனியார் ஊழியர்: அருப்புக் கோட்டை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு ஓராண்டுக்கு மேலான நிலையில் போதுமான வசதிகள் செய்யப்படவில்லை. கூடுதலான டாக்டர்கள், டெக்னீசியன்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் போதுமான அளவில் நியமிக்கப்பட வேண்டும். கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகள் வேண்டும்.

சேதமடைந்த கட்டடம்

சுப்பிரமணி, தொழிலாளி: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிணவறை கட்டடம் இடிந்து பல ஆண்டுகளாக உள்ளது.பயந்து கொண்டே பணியாளர்கள் பணி செய்ய வேண்டி உள்ளது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மக்கள் விரும்பி வருகின்ற நிலையில் தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும்.

தீர்வு

இடிந்த நிலையில் இருக்கும் பிணவறை கட்டடத்தை இடித்து விட்டு நவீன வசதிகள் கொண்ட பிணவறை கட்டடம் கட்டப்பட வேண்டும். பிரசவ வார்டிற்கு கூடுதலான பெண் டாக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஸ்கேன் பரிசோதனைக்கு டாக்டர் நியமிக்கப்பட வேண்டும். லேப் பரிசோதனைகள் செய்ய போதுமான பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். கூடுதலாக ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி தேவையாக உள்ளது. புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ