உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரை ரோடு அமைக்க 2வது முறையாக பூமி பூஜை

சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரை ரோடு அமைக்க 2வது முறையாக பூமி பூஜை

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரை ரோட்டினை சீரமைக்க ஜூன் 20 ல் பூமி பூஜை போடப்பட்டு, பணிகள் தொடங்காத நிலையில், நேற்று மீண்டும் இரண்டாவது முறையாக பூமி பூஜை போடப்பட்டது.சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் இருந்து சிவகாசி - விளாம்பட்டி ரோட்டிற்கு செல்லும் பெரியகுளம் கண்மாய் கரை ரோடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. சாத்துார், வெம்பக்கோட்டை பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சிவகாசி நகருக்குள் வராமல் இந்த ரோடு வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் சென்று மதுரை - - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. மேலும் பள்ளி நேரங்களில் வாகனங்கள் நகருக்குள் செல்லாமல், இந்த ரோடு வழியாக மாற்றி விடப்படுகிறது. ரயில்வே மேம்பால பணி தொடங்கும் முன்னரே பெரியகுளம் கண்மாய் கரை ரோட்டினை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஜூன் 19ல் ரோடு சீரமைக்கும் பணிக்கு எம்.எல்.ஏ.,அசோகன் அடிக்கல் நாட்டினார். தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால் இந்த ரோடு வழியாகவே அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. ரோடு பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதிய ரோடு அமைப்பதற்காக நேற்று இரண்டாவது முறையாக பெரியகுளம் கண்மாய் கரை ரோட்டிற்கு பூமி பூஜை போடப்பட்டது. இதில் எம்.எல்.ஏ., அசோகன், பொறியாளர் ராமமுனீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் - - பார்த்திபனுார் ரோடு - சிவகாசி - ஆலங்குளம் ரோட்டினை இணைக்கும் 1.4 கி.மீ தூர பெரியகுளம் கண்மாய் கரையில் புதிய தார் ரோடு அமைக்க ரூ.94.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதிய ரோடு அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை