தன்மான உணர்வுள்ள திருமாவளவன்அ.தி.மு.க.,வுடன் வர வேண்டும் * அழைக்கிறார் மாபா பாண்டியராஜன்
விருதுநகர்:''விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இதுவரை அ.தி.மு.க., குறித்து நல்ல கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். தன்மான உணர்வுள்ள திருமாவளவன் போன்றோர் அ.தி.மு.க,வுடன் வருவது நல்லது,'' என, விருதுநகரில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது : முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா எல்லா கோயில்களுக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபடுகிறார். முதல்வருக்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் எந்த மதத்திற்கும் ஆதரவாக இருக்கக்கூடாது.திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசு முறையாக கையாண்டு இருந்தால் பிரச்னை பெரிதாக வளர்ந்திருக்காது. மதநல்லிணக்கம் இருந்த இடத்தில் பிரச்னையை வளரவிட்டு இரு சமுதாயத்திற்கு இடையே பகை உணர்வு உருவாக தி.மு.க., தான் காரணம்.அமைச்சர் சேகர்பாபுவை முன்னிலைப்படுத்தி நாங்களும் ஹிந்துக்கள் என்ற முயற்சியில் தி.மு.க.,வினர் ஈடுபடுகின்றனர். பழநியில் முருகன் மாநாடு அரசியல் நிகழ்வாக நடத்தப்பட்டது. ஆனால் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு அரசியல் நிகழ்வாக நடக்கவில்லை.தமிழகத்தில் இதுவரை நடந்த 47 அகழாய்வுகளை தொகுத்து ‛தமிழர் நாகரிகம்' என்ற ஒருங்கிணைந்த அறிக்கையாக வெளியிடவில்லை. மாறாக மத்திய அரசிடம் சண்டை போடுவதற்கு ஒரு சாக்கு கிடைத்திருப்பதாக மட்டுமே தமிழக அரசு பார்க்கிறது. தொல்லியல் துறையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக பணியாளர்கள் இருந்தும் ‛டிஜிட்டல் அருங்காட்சியகம்' உருவாக்கப்படவில்லை.தமிழக அரசை தாங்கி பிடித்திருக்கும் கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் தலைவர் திருமாவளவன் இதுவரை அ.தி.மு.க., குறித்து நல்ல கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். ஆட்சியில் பங்கு என கேட்பதால் கூட்டணியில் சலசலப்பு என்று கடந்து போக முடியாது. தன்மான உணர்வு உள்ள திருமாவளவன் போன்றோர் அ.தி.மு.க,வுடன் வருவது நல்லது என்றார்.