உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விஜயகரிசல்குளத்தில் 4ம் கட்ட அகழாய்வு பணிகளை துவங்க ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

 விஜயகரிசல்குளத்தில் 4ம் கட்ட அகழாய்வு பணிகளை துவங்க ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளத்தில் அகழாய்வுக்கு 25 ஏக்கர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 5 ஏக்கரில் மட்டுமே பணி நடந்துள்ளதால் தொல்லியல் ஆர்வலர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே போதிய நிதி ஒதுக்கி 4ம் கட்டமாக அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை திருமலாபுரம், கொங்கல்நகரம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்தன. விஜய கரிசல்குளத்தில் முதற்கட்ட அகழாய்வில் 16 குழிகளில் 3254, இரண்டாம் கட்ட அகழாய்வில் 18 குழிகளில் 4653 பொருட்கள், மூன்றாம் கட்ட அகழாய்வில் 22 குழிகளில் சூது பவள மணி, தங்கமணி, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் சுடுமண் உருவ பொம்மை உள்ளிட்ட 5003 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு கட்டத்திற்கும் தலா ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. மற்ற அகழாய்வு இடங்களை விட இங்கு மட்டுமே அதிக பொருட்கள் கிடைத்துள்ளன. மற்ற அகழாய்வு இடங்களிலும் கிடைக்காத அலங்கரிக்கப்பட்ட வண்ண சங்கு வளையல்கள், சூதுபவள மோதிரக் கல் இங்கு மட்டுமே கிடைத்துள்ளன. அரிய பொருட்கள் கிடைக்கப்பட்டிருந்தும் இங்கு அகழாய்வு பணிகள் பாதியிலேயே முடிவுக்கு வந்துள்ளன. 25 ஏக்கர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 5 ஏக்கரில் மட்டுமே அகழாய்வு பணி நடந்துள்ளது. இவற்றில் கிடைத்த பொருட்களை வைத்து முன்னோர்களின் முழுமையான வரலாற்றை அறிய முடியவில்லை. தவிர இப்பகுதியில் அவ்வப்போது முதுமக்கள் தாழி கிடைத்த நிலையில் அதுகுறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளனர். தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது: வெம்பக்கோட்டையில் இந்தாண்டு மே மாதத்துடன் அகழாய்வு பணி முடிவடைந்து விட்டது. மேற்கொண்டு நீட்டிக்கப்படவில்லை. பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வரும் இங்கு தொடர்ந்து பணிகள் நடப்பதற்கு பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை. மேலும் முதுமக்கள் தாழி குறித்தும் முழுமையான ஆய்வு இல்லை. இங்கு அகழாய்வுப் பணியை நீட்டிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி