பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி
சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் புதுாரில் கட்டி முடிக்கப் பட்டு ஆறு மாதம் ஆகியும் அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராததால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். சிவகாசி அருகே விஸ்வநத்தம் புதுாரில் அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாக சமுதாயக்கூடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 40 குழந்தைகள் வரை படிக்கின்றனர். சமுதாய கூடத்தில் குழந்தைகள் இட நெருக்கடியில் இருப்பதோடு கழிப்பறை வசதியும் இல்லாத நிலையில் சிரமப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து புதுாரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 14.31 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 7 மாதமாகியும் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் குழந்தைகள் தற்போது வரையிலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் சமுதாயக் கூடத்திலேயே படிக்கின்றனர். எனவே புதிய கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.