மத்திய அரசின் ஜி.எஸ்.டி., குறைப்பு தசரா, தீபாவளிக்கு மக்களுக்கான பரிசு பா.ஜ., மேலிட இணைப்பொறுப்பாளர் பேட்டி
விருதுநகர்: ''மத்திய அரசின் ஜி.எஸ்.டி., குறைப்பு நடவடிக்கை தசரா, தீபாவளிக்கு மக்களுக்கான பரிசாகும்,'' என, விருதுநகரில் பா.ஜ., மேலிட இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மத்திய அரசு ஜி.எஸ்.டி., விதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்து குறைத்துள்ளது இன்று(செப்., 22) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில் உணவு, மருத்துவம், குழந்தைகளுக்கான பொருட்களின் வரிவிதிப்பும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள 140 கோடி மக்களும் பயனடைவர். பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் சேரும். வரி குறைப்பால் டூவீலர், ஏசி, நோட்டு, புத்தகங்கள் உள்பட பல்வேறு பொருட்களின் விலை குறையும். சிறு, குறு வணிகர்களுக்கு உதவியாக மாறியுள்ளது. அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் அதிக வரி விதிப்பால் இந்தியா பாதிக்கப்படாதவாறு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா போன்ற திட்டங்களால் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் வலுவாக உள்ளது. உலகளவில் பொருளாதாரத்தில் 4வது பெரிய நாடாக இந்தியா உருவாகியுள்ளது என்றார்.