உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வடமலைக்குறிச்சி சர்வீஸ் ரோடு பாலப்பணிகள் தாமதம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

 வடமலைக்குறிச்சி சர்வீஸ் ரோடு பாலப்பணிகள் தாமதம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

விருதுநகர்: விருதுநகர் - மதுரை நான்கு வழிச்சாலையில் வடமலைக்குறிச்சி பிரிவு ரோட்டில் சர்வீஸ் ரோடு பாலப்பணிகள் துவங்குவதில் மந்த நிலை நீடிக்கிறது. இதனால் நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் ஆபத்தான முறையில் வாகன ஓட்டிகள் பயணிக்கும் நிலை தொடர்கிறது. விருதுநகர் -- மதுரை நான்கு வழிச்சாலையில் கலெக்டர் அலுவலகம், வடமலைக்குறிச்சி ரோட்டில் கவுசிகா நதியின் மீது சர்வீஸ் மேம்பாலம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்த நிலையில் ரூ.20 கோடி வரை நிதி ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டது. தற்போது வரை துவங்காமல் பணிகள் தாமதமாகி வருகின்றன. இதனால் விருதுநகரில் இருந்து வடமலைக்குறிச்சி ரோட்டிற்கு செல்ல சிவகாசி ரோடு வழியாக சுற்றி வர வேண்டிய நிலை உண்டானது. மேலும் விருதுநகரில் இருந்து செல்பவர்கள் புல்லலக்கோட்டை சந்திப்பு வழியாக நான்கு வழிச்சாலையில் எதிர்திசையில் டூவீலரில் செல்கின்றனர். கவுசிகா நதியை கடந்து செல்வதற்கு மண்ரோடு மட்டுமே உள்ளது. இந்த ரோட்டில் இரவு நேரத்தில் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடப்பதால் செல்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். மேலும் மழைக்காலத்தில் மண்ரோடு முழுவதும் சேறும், சகதியுமாகி வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் நான்குவழிச்சாலை ரோட்டில் பாலத்தை கடந்து வடமலைக்குறிச்சி ரோட்டில் செல்கின்றனர். எம்.பி.,ஆய்வு செய்து கடந்த ஆண்டு பணிகள் துவங்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனவே வடமலைக்குறிச்சி சர்வீஸ் ரோடு பாலப்பணிகளை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்கவும், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்த வேண்டும். பணிகள் துவங்க வேண்டும் சக்திவேல், சமூக ஆர்வலர்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள வடமலைக்குறிச்சி பாலத்தின் அருகே சர்வீஸ் ரோடு பாலம் கட்டப்படவில்லை. இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போனது. இதனால் வாகன ஓட்டிகள் எதிர்திசையில் ரோட்டை கடந்து செல்லும் போது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு சிரமம் மாடசாமி, மெக்கானிக்: கவுசிகா நதியின் குறுக்கே கட்டப்பட்ட நான்கு வழிச்சாலை பாலத்திற்கு சர்வீஸ் ரோடு பாலம் இருபுறமும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் சர்வீஸ் ரோடு பாலம் அமைக்கும் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும். விபத்து அபாய பகுதியாக மாற்றம் சக்திவேல், எலக்ட்ரீசியன்: வடமலைக்குறிச்சி, அதனை சுற்றிய பகுதிகளுக்கு செல்பவர்கள் சர்வீஸ் ரோடு இல்லாததால் தினமும் நான்குவழிச்சாலை எதிர்திசையில் சென்று வருகின்றனர். இரவில் செல்லும் போது வாகன விபத்துகள் நடப்பது சாதராணமானதாக மாறிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை