பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்கள்; திருத்தங்கலில் திறந்தவெளியால் தினசரி அல்லல்
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அவதிப்படுகின்றனர். திறந்தவெளியை நாடுவதால் தினசரி தொற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகி அல்லல்படுகின்றனர்.சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் முத்து மாரியம்மன் காலனியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் சுகாதார வளாகம், பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இல்லை. இதேபோல் முனியசாமி நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. சிவகாசி திருத்தங்கல் ரோடு உள்பட நகரில் பல்வேறு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இல்லை. இவற்றில் முட்புதர்கள் சூழப்பட்டு சேதம் விஷப்பூச்சிகள் நடமாடுகின்றன. சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இல்லாததால் நகர் முழுவதுமே திறந்தவெளி உள்ளது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு மக்கள் தொற்று நோய் பாதிப்பிற்கும் ஆளாகி வருகின்றனர். எனவே பயன்பாட்டில் இல்லாத சுகாதார வளாகங்களில் மராமத்து பணிகள் செய்து தண்ணீர், மின் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.