| ADDED : பிப் 17, 2024 04:32 AM
விருதுநகர்: செண்பகத்தோப்பு வசூல் பிரச்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சேதமடைந்த உலர்களங்களை செப்பனிட வேண்டும்,” என விருதுநகரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் விஜயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்
ராமச்சந்திரராஜா, ராஜபாளையம்: வத்திராயிருப்பு ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், யானை தாக்குதல் அதிகமாக உள்ளது. செண்பகத்தோப்பு கட்டாய வசூல் பிரச்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்.தேவராஜன், துணை இயக்குனர், புலிகள் காப்பகம்: ஆய்வு செய்து யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறை சார்பிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.முத்தையா, தென்னை விவசாயிகள் சங்கம்: செண்பகதோப்பில் வழிபடுவதற்காக கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.அம்மையப்பன், சேத்துார்: கால்நடை வளர்ப்பு செய்யும் விவசாயிகளுக்கு கே.சி.சி., கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாச்சியார் அம்மாள், நேர்முக உதவியாளர்: வழிவகை குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்படும்.கணேசன், சிவகாசி: ஆனைக்குட்டம் பாசன ஆயக்கட்டு பரப்பில் வாடியூர் கிராமத்தின் 300 ஏக்கருக்கு விவசாய நிலங்களை சேர்க்க வேண்டும். அர்ஜூனா நதியில் பட்டாசு கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். கன்னிசேரி கண்மாயை துார்வார வேண்டும்.அழகர்சாமி, திருத்தங்கல்: திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் இருந்து வரும் நீர் இரண்டு பிரிவாக பிரிந்து ஒன்று உறிஞ்சிக்குளம், இன்னொன்று வாடியூர் கண்மாய்க்கு செல்கின்றன.இதன் நீர்வரத்து கால்வாய்களை துார்வாரி கரையை உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து உலர்களங்களை செப்பனிட வேண்டும்.ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: கொத்தன்குளம் கண்மாய் விவசாய நிலங்களுக்கு கால்வாயை கடந்து செல்ல வேண்டி உள்ளது. அதன் குறுக்காக தரைமட்ட பாலம் அமைக்க வேண்டும்.ராம்பாண்டியன்: அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தின் தென் வடக்கு காட்டு பகுதியில் இருந்து வரும் நீர்வரத்து ஓடையை துார்வாரி 12 ஊர் விவசாயத்திற்கு பயன்பட நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.