சிவகாசி கோடவுனில் வைத்திருந்த தீப்பெட்டி கழிவுகளில் தீ விபத்து
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே குடோனில் உள்ள தீப்பெட்டி கழிவுகளில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து மக்கள் சிரமப்பட்டனர்.சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் அச்சகம் செயல்பட்டு வந்த இடத்தில் தீப்பெட்டி கழிவுகள், அட்டை உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். கோடவுனில் இருந்த தீப்பெட்டி கழிவுகள், அட்டைப்பெட்டிகள் எரிந்ததில் துர்நாற்றத்துடன் 30 நிமிடத்திற்கும் மேலாக கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாயினர்.விபத்துக்கான காரணம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.