சிவகாசியில் ரூ.15 கோடியில் மாநாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டல்
சிவகாசி: சென்னை, மாமல்லபுரம் போல் தொழில் நகரான சிவகாசியில் பல்நோக்கு மாநாட்டு அரங்கம் அமைய உள்ளது நமக்கு வரப்பிரசாதம், என அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். சிவகாசி மாநகராட்சி விஸ்வநத்தம் மீன் மார்க்கெட் பகுதியில் ரூ.15 கோடியில் மாநாட்டு அரங்கம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா முன்னிலை வகித்தனர். கமிஷனர் சரவணன் வரவேற்றார். மாநாட்டு அரங்கம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: முதல்வரின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சிவகாசியில் ரூ.15 கோடியில் 3 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் 6400 சதுர மீட்டர் பரப்பில் இரு தளங்களுடன் மாநாட்டு அரங்கம் அமைய உள்ளது. 2024 நவ. ல் விருதுநகரில் முதல்வர் அறிவித்த பல்வேறு அறிவிப்புகள் இன்று செயல்பாட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறது. ஒரு சில அறிவிப்புகள் அரசாணை வெளியிடப்பட்டு தொடங்கப்படும் நிலையில் உள்ளது. சென்னையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு மாநாட்டு கூடம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. மாமல்லபுரத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கூடத்தில் சர்வதேச கலாச்சார நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதேபோல் தொழில் நகரான சிவகாசியில் இது போன்ற பல்நோக்கு கூடம் தொழில் சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்த பயன் தரும். சிவகாசிக்கு இது ஒரு வரப்பிரசாதம், என்றார்.