விருதுநகரில் எரிவாயு தகன மேடை புகைப்போக்கி பழுது உடல்களை எரிப்பதில் சிரமம்
விருதுநகர்: விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள நகராட்சியின் எரிவாயு தகனமேடை மயானத்தில் புகைப் போக்கி பழுதால் பிணம் எரிக்கப்பட்ட புகை வெளியேறாமல், அறைக்குள்ளேயே சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகனமேடை மயானம் உள்ளது. விருதுநகரில் மின் மயானம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இருப்பினும் வரும் உடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தற்போதுள்ள எரிவாயு தகனமேடையே போதுமானதாக உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த மயானத்தில் அடிக்கடி ஏதாவது பழுது ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கு முன் எரிவாயு தகனமேடை எரிவதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு பின் பராமரிப்புக்கான தொண்டு நிறுவனம் மாற்றப்பட்டது. தற்போது எரிவாயு தகனமேடையில் புகைப் போக்கி பழுதாகி உள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால் பிணம் எரிக்கப்பட்ட புகை மயான அறைக்குள்ளேயே சுற்றி பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்று மாசுக்கும் வழி வகுக்கிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என விருதுநகர் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். நகராட்சி கமிஷனர் சுகந்தி கூறியதாவது: பராமரிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்கப்படும், என்றார்.