150 ஆண்டு பழமையான பென்னிங்டன் நுாலகத்தை அரசுடைமையாக்கி அரசாணை வெளியீடு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நுாலகத்தை அரசுடைமையாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லபுத்துார் பெருமைகளில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நுாலகமும் ஒன்று. 1875ல் திருநெல்வேலி கலெக்டராக இருந்தவர் பென்னிங்டன். இவர் தம் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வந்தபோது, மக்கள், பொழுது போக்குவதற்கு, ஒரு நுாலகம் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அதன்படி 1875ல் ஏற்படுத்தப்பட்டது தான் பென்னிங்டன் பொது நுாலகம்.கலெக்டரை தலைவராகவும், ஊரில் உள்ள தர்ம சிந்தனை கொண்டவர்கள் மற்றும் நுாலக வளர்ச்சிக்கு பாடுபடும் மனப்பக்குவம் கொண்டவர்களையும், செயலர், தலைவர் உறுப்பினராகக் கொண்டு இயங்கி வருகிறது இந்த நுாலகம்.பல்வேறு தலைப்புகளில் தமிழில், 35 ஆயிரத்து 936 புத்தகங்களும், ஆங்கிலத்தில், 30 ஆயிரத்து 988 புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. அரசு ஆவணங்கள், பொக்கிஷம் போன்ற பழமையான புத்தகங்களும் இங்கு இடம்பிடித்துள்ளன.இந்த சிறப்புமிக்க ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் நுாலக நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொண்டுள்ளது. சிவகங்கை மாவட்ட பதிவாளரை தனி அலுவலராக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட காலமாக இரண்டு குழுக்களுக்குள் நிலவி வந்த பிரச்னை முடிவுக்கு வந்து தற்போது சொத்து அரசுடைமை ஆகிறது ,என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.