உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள்; பழைய தாலுகா அலுவலகத்தை ஒதுக்க எதிர்பார்ப்பு

ஸ்ரீவி.,யில் வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள்; பழைய தாலுகா அலுவலகத்தை ஒதுக்க எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய தாலுகா அலுவலகம் நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் தற்போது காலியாகும் பழைய கட்டடத்தை நகரில் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு ஒதுக்கீடு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்துார் கிருஷ்ணன் கோவில் தெரு ரோட்டில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் ரூ 5 கோடி செலவில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் கொண்ட புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. இதனை கடந்த மாதம் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தின் போது துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் ஐப்பசி மாதம் அமாவாசை வளர்பிறை நாட்கள் துவங்கியுள்ளதால் நேற்று காலை புதிய அலுவலகத்தில் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சுகபுத்திரா, தாசில்தார் பாலமுருகன், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இன்றும், நாளையும் பழைய கட்டடத்தில் இருந்து பொருட்கள், ஆவணங்கள் புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு திங்கள் கிழமை முதல் முழுமையான அளவில் செயல்பட உள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சொந்த இடம் கிடைக்காமல் நான்கு வழிச்சாலை தாசில்தார் அலுவலகம், அரசு நூலகம், வட்டார கல்வி அலுவலர் அலுவலகம், தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம், குடிநீர் வாரிய அலுவலகம், நன்னடத்தை துறை உட்பட ஒரு சில அரசு அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது. எனவே தற்போது காலியாகும் பழைய தாலுகா அலுவலக கட்டடத்தை தங்களுக்கு ஒதுக்கி தர, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசு அலுவலகங்களின் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி