உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிளவக்கல் பெரியாறு அணை சீரமைப்புக்கு அறிவித்து 8 மாதத்திற்கு பின் அரசாணை

பிளவக்கல் பெரியாறு அணை சீரமைப்புக்கு அறிவித்து 8 மாதத்திற்கு பின் அரசாணை

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகரில் நவ. 10 ல் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த பிளவக்கல் பெரியாறு அணை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு 8 மாதங்களுக்கு பிறகு தற்போது நிர்வாக அனுமதிக்கான அரசாணை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகளை துவங்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் விரும்புகின்றனர். 1980ல் உருவாக்கப்பட்ட பிளவக்கல் பெரியாறு அணையினை பொதுப்பணித்துறை நிர்வகித்து வருகிறது. இங்கு 2001ல் சுற்றுலாத்துறை மூலம் பூங்கா ,வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்தது. 20 ஆண்டுகளான நிலையில் ரோடுகள் சேதம் அடைந்து பூங்காவிற்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கொரோனா ஊரடங்கு காலமான 2020 முதல் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்டத்தின் சுற்றுலா தலமாக விளங்கும் பிளவக்கல் அணை பூங்காவை மீண்டும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என உள்ளூர் மக்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதி மக்களும் கோரி வந்தனர். இந்நிலையில் நவ.10ல் விருதுநகரில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ரூ. 10 கோடி செலவில் பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும், என அறிவித்தார். அறிவித்து 8 மாதங்கள் கடந்த நிலையில் ஆக. 8 அன்று பூங்கா சீரமைப்பு பணிக்கு நிர்வாக அனுமதி அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கிழவன் கோவிலில் இருந்து அணை வரை 3.75 மீட்டர் அகலத்தில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் ரோடு, காம்பவுண்ட் சுவர், பென்சிங் அமைக்கப்பட உள்ளது. நுழைவாயில் முதல் அணை வரை அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மேலும் நுழைவுப் பகுதியில் ஆர்ச், பூங்கா செல்ல பாலம், மரத்தோட்டம், வாக்கிங் செல்ல பேவர் பிளாக் ரோடு, செல்ஃபி ஸ்பாட், யோகா, ஜிம், கேண்டீன், வாட்ச் டவர், வாகன நிறுத்தம், டெலஸ்கோப் உள்பட 29 வசதிகள் செய்யப்பட உள்ளது. தற்போது அரசாணை வெளியான நிலையில் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் துவங்கப்பட்டு 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டுமென சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ