உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைக்க முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு விரைவில் பணிகளை துவக்க விருப்பம்

சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைக்க முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு விரைவில் பணிகளை துவக்க விருப்பம்

சிவகாசி: சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான முதற்கட்ட நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதல் கட்டமாக 10.4 கி.மீ.,க்கு சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகளை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய நகரத்தில் தற்போதைய பெரும் அச்சுறுத்தல் போக்குவரத்து நெருக்கடிதான். நகரில் மெயின் ரோடுகள் அனைத்தும் மிகுந்த போக்குவரத்து நெரிசலில் காணப்படுகின்றன.இதனை தவிர்ப்பதற்காக 2012 ல் சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022 முதல் தீவிர நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி சிவகாசியில் சுற்றிலும் சுற்றுவட்டச் சாலை 34 கிலோ மீட்டர் துாரத்திற்கு அமைகிறது. இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. கீழ திருத்தங்கல், திருத்தங்கல், நாரணாபுரம், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, ஆனையூர், ஈஞ்சார் , வடபட்டி, நமஸ்கரித்தான் பட்டி என 10 கிராமங்கள் வழியாக சுற்றுவட்டச் சாலை செல்கிறது. இதற்கான நில எடுப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டு முடிவடைய உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை 10.4 கிலோமீட்டர் நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளது. கீழ திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் ரயில் தண்டவாளம் செல்வதால் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி, விருதுநகர் - சிவகாசி, கழுகுமலை - சிவகாசி - சாத்துார், சிவகாசி - ஆலங்குளம், சிவகாசி - எரிச்சநத்தம், சிவகாசி - கன்னிசேரி, விஸ்வநத்தம் - வெங்கடாசலபுரம் உள்ளிட்ட ரோடுகள் சுற்றாக இணைக்கப்படும். இந்த சிவகாசி வெளி சுற்றுவட்டச் சாலை பணியில், முதற்கட்ட பணி மட்டும் நடந்தால் எரிச்சநத்தம் வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் சிவகாசிக்கு எளிதில் சென்று வர முடியும்.இப்பணி குறித்து சமீபத்தில் சிவகாசிக்கு வருகை தந்த அமைச்சர் வேலு ஆய்வு செய்து விரைவில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி துவங்கும் என கூறியிருந்தார். அதன்படி விரைவில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ