அன்புமணி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்
சிவகாசி; ''தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி தலைமையில் பா.ம.க., சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும்,'' என, சிவகாசியில் அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கூறினார். அவர் கூறியதாவது: பா.ம.க., தலைவர் அன்புமணிக்கு 2026 ஆக., வரை தலைவராக செயல்பட பொதுக்குழு அனுமதி வழங்கியதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. பா.ம.க., என்பது ஒன்று தான். அது அன்புமணி தலைமையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி தலைமையில் சட்டசபை தேர்தலை கட்சி எதிர்கொள்ளும். கட்சியை பிளவுபடுத்த வேண்டும், அன்புமணி தலைவராக செயல்படக் கூடாது என நினைப்பவர்களிடம் இருந்து கட்சியை காப்பாற்ற அன்புமணி முயற்சி எடுத்து வருகிறார். கட்சி நிறுவனர் ராமதாஸ் தான் என்றாலும் கட்சி தனிநபரின் முடிவின்படி செயல்பட முடியாது. அன்புமணி தலைமையிலான பொதுக்குழு கூட்டணியை இறுதி செய்யும் என்றார்.