பெண் வெட்டிக்கொலை கூலித்தொழிலாளிக்கு ஆயுள்
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோயில் திருவிழாவின் போது பெண்ணை வெட்டி கொலை செய்த கூலி தொழிலாளி மணிமாறன் 36, என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிவகாசி வெம்பக்கோட்டை அருகே கொட்டமடக்கிபட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவியுடன் அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரி 28, என்பவரின் தம்பி சதீஷ் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.இதனால் மணிமாறனுக்கும், முனீஸ்வரி குடும்பத்திற்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. இதற்கிடையில் கள்ளத் தொடர்பு வெளியுலகத்திற்கு தெரிந்ததால் சதீஷ் தற்கொலை செய்து கொண்டார். 2023 ஜூன் 6 இரவு கொட்ட மடக்கிப்பட்டி தெரு காளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழாவிற்கு வந்த முனீஸ்வரியை மணிமாறன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனை தடுத்த உறவினர் ராஜேஷ் என்பவரும் காயம் அடைந்தார். இதில் முனீஸ்வரி இறந்தார். வெம்பக்கோட்டை போலீசார் மணிமாறனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மணிமாறனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.