| ADDED : நவ 16, 2025 03:55 AM
காரியாபட்டி: பணம் வாங்கி தராததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் 33, உடல் கிடைத்தது. தலை மாயமானது. போலீசார், தீயணைப்பு துறையினர் நேற்று ஓடையில் கண்டுபிடித்தனர். மேலும் ஒருவரை கைது செய்தனர். மதுரை மாவட்டம், பெரிய உலகாணியைச் சேர்ந்த ஜே.சி.பி., டிரைவர் மணிகண்டன். ஆவியூர் கடமங்குளம் அருகே பஞ்சர் கடையில் இருப்பார். அப்போது, அதே கடைக்கு அடிக்கடி வந்த, திருமங்கலம் கொக்குளம் பாரதிராஜ் 25, மேல உப்பிலிக்குண்டு விக்னேஷ் 24, ஆகியோர் நண்பர்களாகி, அடிக்கடி மது குடித்தனர். அப்போது மணிகண்டன், அவர்கள் இருவரிடமும் பணம் வாங்கி, தராததால் தகராறு ஏற்பட்டது. அக்.29ல் வெளியில் சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை. ஆவியூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதை அறிந்து இருவரும் ஆவியூர் போலீசில் சரணடைந்தனர். விசாரணையில் பணம் தராததால் மணிகண்டனை கொலை செய்து, கொக்குளம் அருகே பாலத்தில் வீசியதை தெரிவித்தனர். உடல் கிடைத்தது. தலை மாயமானது. தலையை கண்டுபிடித்து தர வேண்டுமென அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுதும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் தேடினர். நேற்று ஓடையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய போது தலை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக கொக்குளம் மதன்ராஜ் 19, என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக் கின்றனர்.