உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிரச்னையும் தீர்வும்

பிரச்னையும் தீர்வும்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் தண்ணீர் செல்லும் ஓடைகள், வாறுகால்களை துார்வாரப்படாததால் கழிவு நீர் தேங்கிவிடுகிறது. சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் ரோட்டில் ஓடி பெரும் சிரமத்தினை ஏற்படுத்துகிறது.சிவகாசியில் சிறுகுளம், பெரியகுளம், செங்குளம் ஆகிய கண்மாய்கள், பொத்தமரத்து ஊருணி உள்ளது. இந்த நீர்நிலைகளுக்கு செல்கின்ற ஓடைகள், வரத்து கால்வாய்கள், வாறுகால்கள் பெரும்பான்மையானவை துார்வாரப்படாமல் மண் மேவி கிடப்பதால் மழை நீர் செல்ல வாய்ப்பில்லை. நகருக்குள் கிருதுமால் ஓடை 2 கி.மீ., நீளமுள்ளது. இந்த ஓடை சிறுகுளம் கண்மாயிலிருந்து காமராஜர் சிலை, முஸ்லிம் ஓடைத்தெரு, மருது பாண்டியர் தெரு, அம்பேத்கர் மணிமண்டபம், டாக்ஸி ஸ்டாண்ட், காந்தி ரோடு வழியாக நகரை விட்டு வெளியேறி மீனம்பட்டி கண்மாய் செல்கிறது. அங்கிருந்து அர்ஜூனா நதியில் கலக்கும். மருத நாடார் ஊரணியிலிருந்து வருகின்ற கால்வாய் அம்மன்கோவில் பட்டி வழியாக சென்று பொத்தமரத்து ஊரணியில் கலக்கிறது.இதேபோல் நாரணாபுரம் ரோட்டிலிருந்து வரும் ஓடை கிருதுமால் ஓடையில் சேர்கிறது. எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி அருகிலிருந்து காரனேசன் காலனி, நேஷனல் காலனி, தீயணைப்பு நிலையம் வழியே வந்து மருதுபாண்டியர் தெரு வழியாக கிருதுமால் ஓடையில் இணைகிறது. அய்யனார் காலனி, சசி நகர் வழியாக அண்ணாமலை நாடார் உண்ணாமலையம்மாள் பள்ளி பின்புறம் உள்ள கால்வாய் வழியாக சென்று விஸ்வநத்தம் ரோடு வழியாக கிருதுமால் ஓடையில் கலக்கிறது. இந்த ஓடைகள் அனைத்துமே 15 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு துார்வாரப்பட்டது. ஓடையில் சிறுவர்கள் விளையாடும் அளவிற்கு இடமிருந்தது. மழைக்காலங்களில் தண்ணீர் எந்த தடையுமின்றி வெளியேறி கண்மாய், ஊருணியில் சேர்ந்தது. ஆனால் தற்சமயம் ஒரு சில ஓடை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளது. இதில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றத்தினை ஏற்படுத்துவதோடு சுகாதார கேட்டினையும் ஏற்படுத்துகிறது.இந்த ஓடை இருக்கின்ற பகுதிகளை கடந்து செல்வதே சிரமமாக உள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் ஓட வழியில்லாமல் ஓடையிலிருந்து வெளியேறி சாக்கடையாக மாறி ரோடு, குடியிருப்பு பகுதிகளில் ஓடுகிறது. மழைக்காலங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் ரோட்டில் ஓடுகிறது. மழைக்காலங்களில் அவ்வப்போது ஓடைகள் வாறுகால்கள் துார்வாரப்பட்டாலும் நிரந்தர தீர்வாக முழுமையாக துார்வார வேண்டும்.தவபாலன், பேராசிரியர், சிவகாசி: தொழில் நகரமான சிவகாசியில் அதிகளவில் கழிவுகள் சேர்வது இயல்பே. தொழிற்சாலைகள், கடைகளின் குப்பைகள் ஓடையில் கொட்டப்படுவதால் தண்ணீர் தங்கு தடையின்றி ஓடி வர வழியில்லை. அவ்வப்போது ஓடைகளை துார்வாரியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர்: முதலில் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்ற வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகரிலுள்ள ஓடைகளில் கோரைப்புற்கள், முட்புதர்கள் நிறைந்துள்ளது. இவற்றில் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிகள் தங்களின் இருப்பிடமாக பயன்படுத்தி கொள்கிறது. மழைக்காலங்களில் இவைகள் ரோட்டிற்கும் வந்து விடுகிறது. மேலும் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. தண்ணீர் ரோட்டில் ஓடுவதால் ரோடு அடிக்கடி சேதமடைந்து விடுகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை