மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.40 கோடி கடன் உதவி வழங்கல்
காரியாபட்டி: காரியாபட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 103 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள ஆயிரத்து 45 மகளிர்களுக்கு ரூ. 40 கோடியே 9 லட்சம் மதிப்பிலான வங்கி கடன் உதவியை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அவர் பேசியதாவது: இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளில் 45 சதவீத தொழிற்சாலைகளில் பெண்கள் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். மாவட்டத்தில் 10,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள், நகர் பகுதிகளில் 3 ஆயிரத்து 800 மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. மதி அங்காடி மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலும் மின்னணு வணிகம் மூலம் பொருட்கள் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. மகளிர்களின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் மூலம் நிதிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து, உயர்ந்த நிலைக்கு வர வேண்டும், சமூக மதிப்பை உயர்த்தி, உயர்ந்த நிலைக்கு வர உறுதுணையாக அரசு செயல்பட்டு வருகிறது என்றார். திட்ட இயக்குனர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், உதவி திட்ட அலுவலர் வசுமதி, பேரூராட்சி தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.