சிவகாசி ரோடுகளில் குவியும் மணலால் விபத்து அபாயம்
சிவகாசி: சிவகாசியில் போக்குவரத்து நிறைந்த முக்கிய ரோடுகளில் குவிந்து கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் மழைக் காலங்களில் சகதியாக ரோடு மாறி விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சிவகாசி நகரில் பெரும்பாலான முக்கிய ரோடுகளில் இருபுறமும் பாதி அளவு மணல் மேவி கிடக்கின்றது. பஸ் ஸ்டாண்டிலிருந்து சாத்துார் செல்லும் ரோடு, காந்தி ரோடு, ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு, பைபாஸ் ரோடு, விளாம்பட்டி ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் இருபுறமும் பாதியளவிற்கு மணல் கிடைக்கின்றது. குறிப்பாக சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட ரோடுகள் குறுகியதாக மாறிய நிலையில் அதிலும் மணல் ஆக்கிரமித்துள்ளதால் ரோடு மேலும் குறுகி விட்டது. இதில் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி வழுக்கி விழுகின்றனர். சைக்கிளில் வருகின்ற பள்ளி மாணவர்கள் தடுமாறுகின்றனர். மழைக்காலங்களில் ரோட்டில் உள்ள மணல்கள் சகதியாக மாறி விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. எனவே நகர் முழுவதும் ரோட்டில் கிடக்கும் மணல்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.