சிவகாசி ரோடுகளில்மணலால் விபத்து அபாயம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சிவகாசி: சிவகாசியில் போக்குவரத்து நிறைந்த சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட முக்கிய ரோடுகளில் கொட்டிக் கிடக்கும் மணலால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சிவகாசி நகரில் பெரும்பாலான முக்கிய ரோடுகளில் இருபுறமும் பாதியளவு மணல் குவிந்து கிடக்கின்றது. பஸ் ஸ்டாண்டிலிருந்து சாத்துார் செல்லும் ரோடு , காந்தி ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, பைபாஸ் ரோடு, திருத்தங்கல் ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் இருபுறமும் பாதி அளவிற்கு மணல் கிடக்கின்றது. இது தவிர சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட காந்தி ரோடு, மணி நகர் முக்கு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட இடங்களிலும் ரோட்டில் பாதி மறைத்து மணல்கள் கொட்டி கிடக்கின்றது. சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் ரோடு குறுகிய நிலையில் மணல் ஆக்கிரமித்து இருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. மற்ற வாகனங்களை முந்தி டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி வழுக்கி விழுகின்றனர்.சைக்கிளில் வருகின்ற பள்ளி மாணவர்கள் தடுமாறுகின்றனர். பிரேக் அடித்தாலும், விலகினாலும் மணல் வாரி விடுகின்றது. மழைக்காலங்களில் மணல் சகதியாக மாறி விடுவதால் அனைத்து வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே நகர் முழுவதும் ரோட்டில் கிடக்கும் மணல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.